மதுரை செல்லூரில் அமையும் மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்.. மாநகராட்சி செய்யும் சிறப்பான செயல்!
மதுரை: மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இணைந்து செல்லூர் பகுதியில் மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கான உடற்பயிற்சி மையம், விளையாட்டு திடம், பொழுதுபோக்கு மையங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்ற குரல் அதிகரித்து வருகிறது. ஒரு சில மால்கள், திரையரங்குகளை தவிர்த்து மதுரையில் பெரியளவில் பொழுதுபோக்கும் மையங்கள் இல்லாத சூழல் உள்ளது. இவ்வளவு ஏன், விளையாட்டு திடல்களே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. இதனால் இளைஞர்கள் எளிதாக போதைக்கு அடிமையாகும் சூழல் நிலவி வருகிறது.

இதனால் இளைஞர்களுக்கான விளையாட்டு திடலுடன் கூடிய ஃபிட்னஸ் மையங்களை தொடங்க வேண்டும் என்று பலரும் பேசி வந்தனர். அந்த வகையில் மாநகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர் சோலைராஜா தொடர்ந்து பேசி வந்தார். மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களிலும் இதுதொடர்பாக பேசப்பட்டது. அந்த வகையில் 29வது வார்டு கபடி சிலை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்கப்பட்டது.
அதிமுக கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கவுன்சிலர்களும் ஆதரவாக இருந்துள்ளனர். இதையடுத்து 75 செண்ட் இடம் மீட்கப்பட்டு, அங்கு மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் உருவாக்குவதற்கான பணிகளை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடங்கி இருக்கிறது. ரூ.50 லட்சம் மதிப்பில் இந்த மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் அமைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே சுற்றுச்சுவர் மட்டும் ரூ.5 லட்சத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட் வீரர்கள் வலைபயிற்சி செய்வதற்கான வசதிகள், கோகோ, சிலம்பரம், கபடி விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகள், பிரத்யேக ஜிம் வசதி, நடைபயிற்சிக்கான டிராக் ஆகியவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் சிலம்பம் கற்றுக் கொள்ள மாணவர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான இடம் கிடைக்காமல் தெப்பக்குளம் சாலை, வண்டியூர் சாலை போன்றவற்றில் பயிற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் செலூரில் மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் அமைப்பது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications