இருக்கு நாளை இரவு பஞ்சாயத்து இருக்கு! மதுரை திமுகவில் என்ன பிரச்சனை? நேரடியாக தலையிடும் முதல்வர்!
மதுரை: மதுரை மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் கோஷ்டிப்பூசல் அதிகரித்து வரும் நிலையில் நாளை இரவு அது தொடர்பான பஞ்சாயத்து இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நாளை மறுதினம் மரியாதை செலுத்துவதற்காக செல்லும் முதல்வர் ஸ்டாலின், நாளை மாலையே சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டுச் சென்று இரவு அங்கு தங்குகிறார்.
மேயருக்கு எதிராக நானே உண்ணாவிரதம் இருப்பேன் என அமைச்சர் மூர்த்தி பேசியதும், கறி விருந்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதும் மதுரை திமுகவில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மதுரை திமுக
மதுரை மாவட்டத் திமுகவில் நாளுக்கு நாள் கோஷ்டிப்பூசல் அதிகரித்து வருவது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி -பழனிவேல் தியாகராஜன் இடையே பனிப்போர் நடந்து வரும் சூழலில் இப்போது கூடுதலாக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும் தனது பங்குக்கு அமைச்சர் பிடிஆருக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வருகிறார். இதனால் தான் அண்மையில் தாம் நடத்திய கறிவிருந்தில் மனம் நொந்து போய் பேசினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மேயர் விவகாரம்
மதுரை மாநகராட்சி மேயர் முழுக்க முழுக்க அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தேர்வு என்பதால் மேயருக்கு எதிராக உள்ளடி வேலைகளை எதிர்தரப்பினர் செய்து வருகின்றனர். மேயரை பதவியிலிருந்து காலி செய்வதாக நினைத்து கட்சியையே காலி செய்யும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்பன உட்பட இவை அனைத்தும் உளவுத்துறை மூலம் பக்காவாக ஆட்சி மேலிடத்துக்கு நோட் போடப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி
அண்மையில் மழைநீர் தேக்கமடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறி முதல்வரை கோபம் கொள்ள வைத்தார். ஒரு அமைச்சர் பொதுவிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ன பேச வேண்டும் என்பது கூட தெரியாதா என மூர்த்தி மீது முதல்வர் வருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படியாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மதுரையில் உட்கட்சி சண்டை தீவிரமடைந்து வருவதால் அதற்கு ஒரு எண்ட் கார்டு போட விரும்புகிறது கட்சித் தலைமை.

மதுரை வருகை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நாளை மறுதினம் மரியாதை செலுத்துவதற்காக செல்லும் முதல்வர் ஸ்டாலின், நாளை மாலையே சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டுச் சென்று இரவு அங்கு தங்குகிறார். அப்போது மதுரை மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசி கோஷ்டிப்பூசலை முடிவுக்கு கொண்டு வருவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications