பிஞ்சு குழந்தையின் நுரையீரலில் எல்இடி லைட்.. ஷாக் ஆகிப் போன பெற்றோர்கள்! மருத்துவர்களின் அபார சாதனை!
மதுரை: திண்டுக்கல்லை சேர்ந்த 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பிராங்கோஸ்கோப்பி நுரையீரல் அகநோக்கி மூலம் குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த ரிமோட் கண்ட்ரோல் லைட் அகற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அன்று பெற்றோர்களால் அழைத்து செல்லப்பட்டது.

தொடர்ந்து நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் எடுக்கப்பட்ட "எக்ஸ்ரே "வில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பதாக தென்பட்டது.
இதனையடுத்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 1ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இடது நுரையீரலில் மூச்சு குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளது ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.
8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது. எனவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப் பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த பொருள் கடந்த 2ஆம் தேதி அன்று அகற்றப்பட்டது. அகற்றிய பின் இரும்பு ஊசிபோன்று ஸ்கேன் பரிசோதனையில் தென்பட்ட பொருள் குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் என உறுதி செய்யப்பட்டது.
இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று கடந்த 4ஆம் தேதி நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.
மேலும் மருத்துவமனை முதல்வர் கூறியதாவது, சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை வயிற்றில் விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை விளையாட அனுமதிக்க கூடாது.
மேலும் குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications