“கல்யாணத்துக்கு என்ன கொடுத்தீங்கனு கேட்க வேண்டியதுதானே!” பூபாலனை ஏற்றிவிடும் மாமியார்! ஷாக் ஆடியோ
மதுரை: வரதட்சணை கேட்டு தன்னை தாக்கியதாக இளம்பெண் கொடுத்த புகாரில், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் அவரது கணவர் பூபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், வரதட்சணை தொடர்பாக பூபாலனும், அவரது தாயாரும் பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மதுரை காதகிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பிரியா. இவருக்கும், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீப காலமாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தங்கப்பிரியா கூறி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கப்பிரியா, உதடு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தன்னை கணவர் பூபாலன் வரதட்சணை கேட்டு தாக்கியதாக பூபாலன் பணியாற்றும் அதே அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். காவலர் பூபாலன், அவரது தந்தை போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமரன், பூபாலனின் தாய் மற்றும் தங்கை என 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து இன்று மதியம் திருப்பூரில் பதுங்கியிருந்த பூபாலனை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரை அழைத்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் வரதட்சணை குறித்து பூபாலன் தனது தாயிடம் பேசுவதாக ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில் வரதட்சனையை கேட்க தாய் வலியுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில்,
பூபாலன்: "மகனுக்கு பகுமானமாக பார்க்கிறான் அம்மா"
பூபாலனின் தாய்: "நீ கேட்க வேண்டியதுதானே! ஏன் மாமா என் கல்யாணத்துக்கு என்ன கொடுத்தீங்க? என்று. வெறும் ரூ.50,000 கொடுத்து முடித்துவிட்டீர்கள். ஆவுன்னா.. புள்ளைங்க எல்லாம் ஒன்னுன்னு சொல்றீங்க. ஆனா மகனுக்கு மட்டும் சிறப்பா கல்யாணத்தை பண்ணியிருக்கீங்க அப்படின்னு நீ நாக்கை புடிங்குக்குற மாதிரி கேட்டிருக்கனும்.
நீ அவன்கிட்ட எல்லாம் பேச்சு வச்சுக்காத. நீ உன் பொண்டாட்டிக்கிட்டதான் கேட்டிருக்கனும். பின்னாடி செய்யுறேன், பின்னாடி செய்யுறேன்னு சொன்னாங்க. என்னத்த கிழிக்குறாங்க பின்னாடி?
பூபாலன்: "அதுக்குதான் பிட்டை போட்டுவிட்டீர்களே என்று சொல்லியிருக்கா. இந்நேரம் எல்லாத்தையும் சொல்லியிருப்பா"
பூபாலனின் தாய்: "ஆமா, ஆமா உன் மனைவி ஒன்னும் லேசுபட்டவ கிடையாது. எல்லாத்தையும் ஒப்புச்சிருப்பா" என்று ஆடியோவில் பேசப்பட்டிருக்கிறது.
வரதட்சணை கொடுமையை தடுக்க வேண்டிய காவலரை, வரதட்சணை வாங்க சொல்லி தாய் கட்டாயப்படுத்தியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications