‛‛முற்றும் மோதல்’’.. என்னது விசாரணைக்கு ஆஜராகனுமா? தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபர கடிதம்
சென்னை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் பரபரப்பான கடிதம் எழுதியுள்ளனர். அதில் தமிழக போலீஸ் மீது முக்கிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சத்தை கடந்த 1ம் தேதி லஞ்சமாக வாங்கினார். இதையடுத்து அவரை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது அங்கித் திவாரி சிறையில் உள்ளார்.

முன்னதாக அவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்கள், 3 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் அமலாக்கத்துறைக்கும், தமிழக போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சோதனையின்போது அவர்கள் இடையூறு செய்ததாக கூறி அளித்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெருக்கடி வளையம்.. விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்.. மதுரை போலீசாரின் அதிரடி முடிவு!
இது ஒருபுறம் இருக்க அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதியது. அதில் கடந்த 1ம் தேதி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் சில முக்கிய ஆவணங்களை திருடி சென்றதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த புகார் கடிதம் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் சார்பில் உரிய ஆதாரங்களை அளிக்கும்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நேற்று 2வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் எந்த ஆதாரங்களும் வழங்கப்படவில்லை. அதோடு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு மூன்றாவது முறையாக மீண்டும் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛மதுரை காவல்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்ட சம்மனில் உரிய தகவல் இல்லை. மேலும் சம்மன் அனுப்பியது யார்? என்பது பற்றிய விபரம் இல்லை.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்பது என்பது உள்ளநோக்கம் கொண்டதாக உள்ளது. அதோடு தற்போதைய சம்மனில் எந்த மாதிரியான விளக்கம் வேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்படவில்பைல’’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு மூலம் அமலாக்கத்துறை மற்றும் தமிழக போலீசார் இடையேயான மோதல் போக்கு என்பது தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications