ஏய் எப்புட்றா.. மதுரை மாநகராட்சி மண்டபத்தையே ஆட்டையே போட்ட கவுன்சிலர்! 10 வருஷமா வாடகைக்கு விட்டு..
மதுரை: மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் வரி முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர், மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தை 10 வருடங்களுக்கு மேலாக வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறார். தகவல் தெரிந்த அதிகாரிகள் தற்போது அதனை மீட்டெடுத்திருக்கின்றனர். பெயிண்டை மாற்றி அடுத்து தனது சொந்த கட்டிடம் போலவே அதனை வாடகைக்கு விட்டு இருக்கிறார் அந்த கவுன்சிலர்.
மிகவும் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு விவகாரம். வரி உயர்த்தப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், அவரது கணவர்கள், அதிகாரிகள், பில் கலெக்டர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இந்த நிலையில் வேறு எந்த வகையிலாவது மதுரையில் முறைகேடுகள் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்னால் கவுன்சிலர் ஒருவர் சிக்கி இருக்கிறார்.

அதாவது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தை தனியார் திருமண மண்டபம் போல மாற்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்திருக்கிறார் அந்த கவுன்சிலர். தற்போது மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் இருக்கும் நிலையில் இரண்டு வார்டுகளுக்கு ஒரு சமுதாயக்கூடம் என்ற அடிப்படையில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உதவி பொறியாளர்கள் இந்த சமுதாயக்கூடங்களில் நிர்வாக பொறுப்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சமுதாய கூடங்களுக்கு வரும் கட்டணம் மாநகராட்சிக்கு வராமல் அரசியல் பிரமுகர்கள் தரப்பில் வசூலிக்கப்படுவதாகவும் அரசியல் செல்வாக்கு படைத்த பலர் அந்த பணத்தை முறைகேடாக பெற்றுக் கொள்வதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மாநகராட்சி சமுதாயக்கூடங்களை கணக்கில் எடுத்து அவற்றை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஆணையர் சித்ரா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் 54ஆவது வார்டில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம் 10 ஆண்டுகளாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தெரிய வந்தது. மேலும் அதன் வருவாயும் மாநகராட்சிக்கு வரவு வைக்கப்படவில்லை. இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த சமுதாய கூடத்தில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மின் இணைப்பின் பெயரை மாற்றி தனியார் திருமண மண்டபமாக மாற்றி வைத்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் சமுதாயக்கூடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதனை வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்திருக்கிறார். மேலும், தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்ததும் தெரிய வந்தது. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில் அரசு சார்பில் பூசப்பட்ட வண்ணத்தை மாற்றி தனியார் திருமண மண்டபம் போல புது பெயிண்ட் அடித்து அதனை தனது சொந்த திருமண மண்டபம் என கூறி வந்திருக்கிறார். பொதுமக்களும் அதிகாரிகளும் அது அரசுக்கு சொந்தமான சமுதாயக்கூடம் என்பதை மறந்து விட்ட நிலையில் முறையான ஆவணங்களை வைத்து ஆய்வு செய்தபோதுதான் அது அரசுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
தற்போது அதிகாரிகள் மூலம் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயக்கூடத்தை திருமண மண்டபமாக மாற்றி பணம் பார்த்து வந்த முன்னாள் கவுன்சிலர் யார்? எவ்வளவு பணம் அவரால் முறைகேடு செய்யப்பட்டது? அவர் மீது நடவடிக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications