மதுரை ரயில் தீ விபத்து: ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்கள்.. அதிகாலை நடந்தது என்ன? பயணி தகவல்
மதுரை: மதுரை ரயிலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டின் கழிவறை முழுவதும் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 55 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க கடந்த 17 ஆம் தேதி புறப்பட்டுள்ளனர்.

புனலூர் அருகே வேறு ஒரு ரயிலில் இந்த பெட்டியை இணைப்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென இநத பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் தீயில் கருகி இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களுடைய உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அது போல் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்து குறித்து தகவலறிந்ததும் அங்கு போலீஸார், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதுகுறித்த முதல் கட்ட விசாரணையில் ரயிலில் சிலிண்டர் வெடித்ததே தீவிபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என்ற போது ஒன்றல்ல இரண்டல்ல 3 சிலிண்டர்களை எப்படி இவர்கள் எடுத்துச் சென்றார்கள் என தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். வடமாநிலங்களில் கொள்ளையடிக்கும் கும்பல் ரயில்களில் கொள்ளையடிப்பர். அது போல் தமிழக ரயிலிலும் கொள்ளையர்கள் ஏறிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் பெட்டியை பூட்டிவிட்டனர்.
அப்போது 5.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது இரு சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. அந்த பெட்டியில் பலர் அயர்ந்து தூங்கியதாலும் பெட்டியை பூட்டிவிட்டதாலும் வெளியேற முடியாமல் தீயில் கருகி 10 பேர் பலியாகிவிட்டனர்.
தீ பிடித்தது தெரியாமல் பலர் அயர்ந்து தூங்கிவிட்டதாகவும் தெரிகிறது. எனினும் தீ விபத்தை அறிந்த சிலர் எப்படியோ காயங்களுடன் தப்பிவிட்டனர். புகையால் பலர் மூச்சுத்திணறிய நிலையில் தீயில் கருகி இறந்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க ரயிலில் சிலிண்டர் கொண்டு சென்றதே காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களை வைத்திருந்தனர். பெரிய பெரிய டபராக்கள், கரண்டிகள், தட்டுகள், பெரிய பெரிய அண்டாக்கள் என இருந்தன. இது போல் சுற்றுலா செல்வோர் உணவை சமைத்து சாப்பிட்டால்தான் கட்டுப்படியாகும் என்பதால் தங்களுடன் சமையல் பொருட்கள், சமையல் கலைஞர்களையும் உடன் அழைத்து செல்வர்.
இது வேன், பஸ், லாரியில் சுற்றுலா செல்லும் போது நடக்கும். ஆனால் ரயிலில் சிலிண்டரை கொண்டு சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறுகையில், அதிகாலை டீ குடிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போதுதான் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது என்றனர். இந்த ரயில் தீ விபத்து குறித்து தகவலறிய 9360552608, 8015681915 ஆகிய இலவச உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் ஒடிஸாவில் ரயில் விபத்து நடந்த நிலையில் தற்போது மதுரையில் இப்படி ஒரு சோக விபத்து நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications