பேராசிரியர் அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் கல்லூரியில் பாடம் நடத்திய மாணவியை கல்லூரி பேராசிரியர் சக மாணவர்கள் முன் திட்டியதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த செல்வக்குமார்- ஜோதி தம்பதியின் 2ஆவது மகள் பத்மப்ரியா (21). இவர் மதுரைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பத்மப்ரியா, கல்லூரி படிப்பிலும் முதல் மாணவியாக படித்து தங்கப்பதக்கம் பெற்றவர் பத்மப்ரியா.
ஊரடங்கு
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மதுரைக் கல்லூரி திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி அன்று பத்மப்ரியா கல்லூரிக்கு சென்றார். வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சந்தேகங்களை அவர் விளக்கினார்.
கணிதத் துறை எச்ஓடி
அப்போது அங்கு வந்த கணிதத் துறையின் தலைவர் (எச்ஓடி) பேராசிரியர் முத்துக்குமார் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் பத்மப்ரியாவை பார்த்து "நீ என்ன பெரிய பிரொபஸரா.. பாடம் நடத்தும் அளவுக்கு பெரிய ஆள் ஆகி விட்டீயா என்ன? என கேட்டு சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
திட்டி அவமானம்
மேலும் சக மாணவர்களுக்கு பாடம் நடத்தியதற்காக பத்மப்ரியாவை வெளியில் நிறுத்தியதாகவும் தெரிகிறது. அப்போது அழுத அந்த மாணவிக்கு சக மாணவிகள் ஆறுதல் தெரிவிக்க முயன்ற போது அவர்களையும் முத்துக்குமார் திட்டியுள்ளதாக தெரிகிறது.
விஷம் குடித்த மாணவி
இந்த வருத்தத்துடன் வீட்டிற்கு வந்த பத்மப்ரியா வீட்டில் யாரிடமும் விஷயத்தை சொல்லாமல் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் இறந்த மாணவி
இந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து முத்துக்குமாரிடம் பத்மப்ரியாவின் பெற்றோர் விளக்கம் கேட்ட போது அவர்களையும் அவர் திட்டி அனுப்பிவிட்டாராம். இதையடுத்து அந்த பேராசிரியரை பணிநீக்கம் செய்து கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை பெறுவோம் என பெற்றோரும் உறவினரும் தெரிவித்தனர்.