மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு.. முன்னாள் டிஎஸ்பிக்கு 5 ஆண்டு சிறை
மதுரை: மதுரையில் தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை மதுரை தினகரன் அலுவலகம் வெளியிட்டது. இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், அழகிரி கடைசி இடத்திலும் இருந்தனர். இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர்.

உடனே தினகரன் அலுவலகத்துக்கு சென்று அங்கு தீவைத்து கொளுத்தினர். அதில் அங்கு பணியில் இருந்த கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் உடல் கருகி பலியாகினர். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.
இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் மாவட்ட நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதுபோல் சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த அப்போதைய டிஎஸ்பி ராஜாராம் தனது கடமையை செய்ய தவறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அதில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications