நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களுக்கு பத்திர பதிவுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டங்ககளின் பத்திரப் பதிவுக்குத் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது.
மதுரை: தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டங்களின் பத்திரப் பதிவுக்குத் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மதுரையை சேர்ந்த, அருள்நிதி, முத்துக்குமார், ரமேஷ் போன்ற வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி ராஜா அமர்வு, 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அதன்பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டது. அதை ஏற்று கடந்த 11ம் தேதி ஐந்து கலெக்டரும் நேரில் ஆஜரானார்கள்.
நீர்நிலைகளில் எப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, அதன் விவரம் என்ன என்று அப்போது நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டத்தில் வண்டியூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பனையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இன்று இதை விசாரித்த ஹைகோர்ட் கிளை, 5 மாவட்டங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதவிர பல முக்கியமான உத்தரவுகளையும் ஹைகோர்ட் கிளை பிறப்பித்தது.
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களின் பத்திரப் பதிவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு பட்டா வழங்கவும் ஹைகோர்ட் அதிரடி தடை விதித்து இருக்கிறது.
பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு இதுகுறித்து உரிய சுற்றறிக்கையை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமாக கழிவு நீர்க் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கலக்கவும் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications