6வது விரலால் காவலர் பணி நிராகரிப்பு.. மாற்றுத்திறன் அரசுப் பணிக்கு தடையல்ல: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை: இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாகக் கூறி காவலர் பணிக்கு நிராகரிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கையை மறு சீராய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒருவரின் மாற்றுத்திறன் அவர் அரசுப் பணி பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது. ஒருவரின் மாற்றுத்திறன் வேலைத் திறனை பாதிப்பதாக இருந்தால் மட்டுமே வேலை மறுக்க முடியும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மத்திய பணியாளர் தேர்வாணையம் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ஆயுதப்படை (சிஆர்பிஎப்) உள்ளிட்ட மத்திய போலீஸ் படை காவலர்கள் (central armed police forces) தேர்வு தொடர்பாக 2023இல் அறிவிப்பு வெளியிட்டது.
அப்போது நான் காவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற நிலையில் 7.10.2024இல் மருத்துவ தேர்வில் பங்கேற்றேன். மருத்துவ தேர்வுக்கு பிறகு, எனது இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி நான் காவலர் பணிக்கு நிராகரிக்கப்பட்டேன். என்னை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காவலர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் 2021-ல் வெளியிட்ட திருத்தப்பட்ட மருத்துவ தகுதி தேர்வு தொடர்பான வழிகாட்டுதலில், பணி செயல் திறனை பாதிக்காத வகையில் உடலில் சிறிய குறைபாடுகள் இருந்தால் அரசு பணி மறுக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மனுதாருக்கு கூடுதல் விரல் இல்லை. கட்டை விரல் உயரம் குறைவாக உள்ளது. இதை கூடுதல் விரல் எனக்கூறி பணி வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரை காவலர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் கூடுதல் விரல் இருந்தால் தகுதி நீக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுதல் விரல் இருப்பதால் ஆயுதங்களை கையாள்வதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற குறைபாடுகள் உள்ளவர்களை காவல் படைகளில் சேர்ப்பது ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "அரசுப் பணியில் முன்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னர் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இப்போதும் அரசுப் பணி பாதுகாப்பான பணியாகவே கருதப்படுகிறது. மாற்றுத்திறன் என்பது கடவுளின் செயல். அதை மனித தவறாக கருத முடியாது. ஒருவரின் மாற்றுத்திறன் அவர் அரசுப் பணி பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது.
ஒருவரின் மாற்றுத்திறன் அவர் அரசுப் பணி பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது. ஒருவரின் மாற்றுத்திறன் வேலைத் திறனை பாதிப்பதாக இருந்தால் மட்டுமே வேலை மறுக்க முடியும். அப்படி இல்லை எனில் அவருக்கு வேலை மறுக்க தேவையில்லை, எனவே மனுதாரரின் மருத்துவ அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மத்திய காவல் பணிக்காக மனுதாரரின் மருத்துவ அறிக்கையை மறுசீராய்வு அல்லது மீண்டும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications