வரதட்சணை புகார்! "பேசினாலே எரியுது! வாயில நகத்திலேயே பிராண்டிட்டேன்!" மதுரை காவலர் பூபாலன் கைது
மதுரை: மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, அவரது கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையில் பணிபுரிந்து வரும் கணவர் பூபாலன், இன்ஸ்பெக்டரான அவரது தந்தை செந்தில்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அது போல் பூபாலனை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன். இவர் மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார். அதாவது தந்தையும் மகனும் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் பூபாலனுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தங்கப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
60 பவுன், புல்லட் பைக்
திருமணத்தின்போது 60 சவரன் நகைகள், புல்லட் பைக், சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்தபோதிலும், மேலும் பணம் மற்றும் நகைகள் வாங்கி வருமாறு தனது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகத் தங்கப்பிரியா புகார் அளித்துள்ளார்.
தங்கப்பிரியா புகார்
அந்த புகாரில், "எனது தாய்வீட்டில் திருமணத்தின் போது 60 சவரன் நகை, புல்லட் பைக் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுத்தார்கள். ஆனாலும் கணவர் உள்பட அவருடைய குடும்பத்தினர், சொந்த வீடு கட்ட பணத்தையும் நகையையும் கேட்டு வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வந்தனர். எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட முக்கிய காரணம் கணவரின் குடும்பத்தினர் என்றும் தங்கப்பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
மாமியார் வீட்டார் மீது பூபாலனுக்கு கோபம்
இந்த நிலையில், தொடர்ந்து வரதட்சணை கேட்டுச் சித்ரவதை செய்து வந்த நிலையில், மாமியார் வீட்டில் நகை, பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பூபாலன், தங்கப்பிரியாவை ஒரு அறையில் தனியாக அடைத்து வைத்துச் சித்ரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
மனைவி சித்ரவதை
இந்தச் சித்ரவதையால் படுகாயமடைந்த தங்கப்பிரியா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கப்பிரியாவின் புகாரின் பேரில், அவரது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டார்ச்சர் செய்த பூபாலன்
இந்த நிலையில் தனது மனைவியை என்னவெல்லாம் கொடுமை செய்தார் என்பது குறித்து தனது தங்கை அனிதாவிடம் பூபாலன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது மனைவியின் வாயை பிராண்டிவிட்டதாகவும் கழுத்தில் குத்தியதாகவும் கால்களை பின்னிவிட்டதால் முட்டியில் பிரச்சினை ஏற்பட்டு நடக்க முடியாமல் போனதாகவும் பூபாலன் சிரித்துக் கொண்டே விவரிக்க, அதை சக பெண்ணான அனிதா மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரும் பெண்ணா?
"அண்ணியை ஏன் இவ்வளவு கொடுமை செய்தாய், எனது புகுந்த வீட்டில் இப்படி செய்தால் என்னவாகும், நீ எப்படி துடித்து போவாய், அப்படித்தானே அண்ணி வீட்டிலும் துடிப்பார்கள்" என்றெல்லாம் பூபாலன் தலையில் தட்டி கேட்க வேண்டிய அனிதா ஏதோ குழந்தைகளின் விளையாட்டு கதையை கேட்பது போல் ஆர்வத்துடன் எந்த பதற்றமும் இல்லாமல் கேட்டது "இவரும் ஒரு பெண்ணா" என நினைக்க தோன்றியது. குறைந்தபட்சம் அண்ணிக்கு ஏதாவது நடந்தாலோ அண்ணன் ஜெயிலுக்கு போனாலோ தனது அண்ணன் குழந்தைகளின் நிலை என்னவாகும் என ஒரு அத்தையாக கூட அனிதா உணராதது கொடூரத்தின் உச்சம்!
பூபாலன் கைது
இந்த நிலையில் புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், காவலர் பூபாலன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி அபினப் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். வரதட்சணை கொடுமை என போலீஸிடம் புகார் கொடுத்தால் அந்த போலீஸ்காரர்களே தங்கள் வீட்டு பெண்களுக்கு இந்த கொடுமையை அரங்கேற்றுவது பெரும் துயரமானது.












Click it and Unblock the Notifications