கோவிந்தா கோவிந்தா! கோஷத்துடன் நடந்த கள்ளழகர் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்.. பூத்தூவிய ஹெலிகாப்டர்
மதுரை: மதுரை அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் உள்ளது. சித்திரை திருவிழாவின் போது அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் பிரசித்தி பெற்றது. இந்த அழகர்கோயிலில் 2011 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தும் நடைமுறை உள்ளது. இதற்காக ரூ 2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நேற்று முன் தினம் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நேற்றும் 2 ஆவது நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர் ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகளை நடத்தினர். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை காண போதிய தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். முன்னதாக யாக சாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுரத்தில் உள்ள கும்பங்களில் ஊற்றப்பட்டது
தொடர்ந்து 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்கள் மீது கும்ப நீர் தெளிக்கப்பட்டது. பல வண்ணங்களால் ஆன பூக்களை ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களிலும் பக்தர்கள் மீதும் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அன்னதானம் சாப்பிடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி கள்ளழகர் கோயில், ராஜகோபுரம், 18 ஆம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று இரவு கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அது போல் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications