மதுரையில் மாற்றம்.. கோவை நிறம் மாறுது.. ரூ.11.340 கோடியில் மெட்ரோ: நிலம் எடுக்கும் பணி துவங்குகிறது
மதுரை: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி வரும் பிப்ரவரி மாதம் துவங்கும் என்றும் சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன் ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2ம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.10,700 கோடியாகும்.
சுரங்கப்பாதை: அதேபோல் மதுரையில், திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் தொலைவுக்கு, ரூ.11,300 கோடியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவையில் மெட்ரோ சுரங்கபாதை கிடையாது. ஆனால் மதுரையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதால்தான், கோவையைவிட மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியதாகிவிட்டதாக சொல்கிறார்கள். தற்போது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் வேகமெடுத்துள்ளன..
2 நாட்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் இயக்குநர் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது அதிகபட்சமாக 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மக்கள் வரை தினமும் மெட்ரோ ரயிலில் பயணிப்பார்கள். மக்களின் பயண நேரத்தையும் இது குறைக்கும். மக்கள் அதிகளவில் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதையும் குறைப்பார்கள்'' என்று கூறியிருந்தார்.
வழித்தடம்: இந்நிலையில், சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "கோவை மாநகராட்சியில் 32 ஸ்டேஷன் 2 வழி தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கி, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். சமீபத்தில் அரசு கூடுதல் விவரங்களை கேட்டதால், அந்த விவரங்கள், மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11.340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.. இடங்களை தேர்வு செய்ய 2 வருடங்கள் ஆகும். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்க உள்ளோம்..
பணிமனை: மெட்ரோ பணிமனை அமைப்பதற்கு 16 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.. வழித்தடம் அமைப்பதற்கு, 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.. பணிமனை, சக்தி பொறியியல் கல்லுாரி அருகே அமைக்கப்படும். சிறிய பணிமனை ஒன்று, வழியம்பாளையம் பிரிவில் அமையும். மொத்த திட்டத்திற்கான அனுமதியும், மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்ததுமே, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் திட்ட பணிகள் என்பது 10 அல்லது 20 வருடங்களாக மேற்கொள்வது அல்ல. அது 150 ஆண்டுகளுக்கான கட்டமைப்பாகும். கோவை, மதுரை மெட்ரோ திட்டம் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது.
16 ஹெக்டேர் நிலம்: கோவை மெட்ரோ ரயிலில் 3 பெட்டிகளில் 700 பேர் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 2 வழித்தடங்களில் மெட்ரோ அமைக்க 16 ஹெக்டேர் நிலம் தேவை என்பதால், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.. மெட்ரோ பாதையில், 30 மீட்டர் இடைவெளியில் ஒரு தூண் கட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications