நடிகர் தனுசை மகன் என உரிமை கோரிய மதுரை முதியவர் உயிரிழந்தார்.. அரசு மருத்துவனையில் பிரிந்த உயிர்
மதுரை: நடிகர் தனுஷ் எங்களின் மகன் என்று மதுரை தம்பதி உரிமை கோரி வழக்கு தொடர்ந்த மதுரையை சேர்ந்த கதிரேசன் நேற்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆர் கதிரேசன் (வயது70). இவரது மனைவி பெயர் மீனாட்சி. இந்நிலையில் தான் கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று உரிமைக்கோரினர்.
அதாவது சிறு வயதில் தங்களின் மகன் காணாமல் போய்விட்டான். அவனது பெயர் கலைச்செல்வன். அவர் தான் இப்போது நடிகர் தனுஷாக இருக்கிறார் எனக்கூறி பரபரப்பை கிளப்பினர்.

மேலும் தங்களுக்கு வயதாகிவிட்டது. இதனால் நடிகர் தனுஷ் தான் தங்களை பராமரிக்க வேண்டும் என மதுரை மாவட்டம் மேலூர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பிறகு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கிடையே தான் நடிகர் தனுசை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமானது.
இந்நிலையில் தான் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவரது டிஎன்ஏவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையே தான் சிகிச்சை பலனின்றி கதிரேசன் நேற்று உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications