நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. நடராஜன் மாமாவுக்கு நல்லா தெரியும்.. மதுரை மீனாட்சி பகீர் தகவல்!
மதுரை: நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள், வாரிசு சான்றிதழை முறையாக பெற்று சட்டப் போராட்டம் நடத்தி நிரூபிப்பேன் என மதுரையைச் சேர்ந்த பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை டி ஆர் ஓ காலனி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் நான்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று கூறி வருகிறார்.
தனது தாயார் பெயர் ஜெயலலிதா என்றும் அவர் போயஸ் கார்டனில் வாழ்ந்து மறைந்து விட்டார் என்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு அதிகாரிகளை தொடர்ந்து அலற விட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறார் மீனாட்சி.
மறைந்த முன்னாள் முதல்வர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் அவரது வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு பலரும் கிளம்பினர். பரபரப்பாக ஊடகங்களில் அவரது பேட்டி எல்லாம் வெளியாகி அப்புறம் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். ஜெயலலிதா மறைந்த பின்னரும் பலரும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.
ஜெயலலிதாவின் மகள்
அப்புறம் சில பல பேட்டிகளுக்கு பின்னர் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விடும். இந்த நிலையில்தான் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி, தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண், எனது தாயார் பெயர் ஜெயலலிதா. அவர் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று சொல்லி ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் வாரிசு சான்றிதழ் மனுவை நிராகரித்துள்ளனர்.
தாசில்தார் அலுவலகம்
இதனால் அந்தப் பெண், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். அப்போது அவர்களிடம் "அத்தை சசிகலாவின் கணவர் நடராஜன் மாமா என்னை சந்தித்து, காவல்துறை அதிகாரிகளிடம் இவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று சொன்னார்" என கூறி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்தார் மீனாட்சி. மேலும் அவர் கூறுகையில் "நீதிமன்றம் சென்றாவது நான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்பதை நிரூபிப்பேன்" என்றார்.
ஜெயலலிதாவின் மகள்
இவ்வளவு நாட்களாக ஜெயலலிதாவின் மகள் நீங்கள்தான் என்று ஏன் கூறவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறினால் என்னை கொன்று விடுவார்கள். பலரும் எனக்கு உயிருக்கு அச்சத்தை தரும் வகையில் மிரட்டல் விடுக்கிறார்கள். மதுரை மட்டுமல்லாது அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்பது தெரியும்.
உயிருக்கு அச்சுறுத்தல்
ஆனால் உயிர் பயம் காரணமாக யாரும் இதை வெளியே சொல்ல மறுக்கின்றனர். நான் கருப்பாக இருப்பதால் என்னை ஜெயலலிதாவின் மகள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் மீனாட்சி.