எங்கே போகிறது மதுரை.. கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறல்.. தட்டி கேட்ட தந்தைக்கு மகள் கண்முன்பே உதை
மதுரை: மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட ஒரு மாணவியின் தந்தை சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கல்லூரி மாணவிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த மாதம் ஒரு கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக, ஈரோட்டில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவியின் கழுத்தை ஒரு இளைஞர் பிளேடால் அறுத்தார். காதல் தகராறு காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புகார் கொடுக்க வருபவர்களை.. விழுந்து விழுந்து கவனிக்கும் மதுரை போலீசார்.. கமிஷனர் செய்த மாஜிக்
மதுரையில் தொடரும் அட்டூழியம்
இதனிடையே, மதுரையில் கடந்த சில நாட்களாகவே மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு இளைஞர்கள் அடாவடியில் ஈடுபடுவதை காண முடிகிறது. மூன்று தினங்களுக்கு முன்பு நரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்குள் புகுந்து சில இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்று அந்த இளைஞர்களை கைது செய்தனர். இந்த சூழலில், மதுரையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அதிரச்சியடைய செய்துள்ளது.
மீனாட்சி மகளிர் கல்லூரி
மதுரை நேற்று மாலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தியில் இறுதி ஊர்வலம் ஒன்று சென்றது. அந்த ஊர்திக்கு பின்னால் மதுபோதையில் ஏராளமான இளைஞர்கள் திரண்டு நடனமாடியபடியும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்தபடியும் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், கோரிபாளையத்தில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிக்கு முன்பு இந்த அமரர் ஊர்தி வந்தபோது, அங்கிருந்த மாணவிகளை அந்த இளைஞர்கள் கிண்டல் செய்தனர்.
சரமாரி அடி உதை
அப்போது அங்கிருந்த ஒரு மாணவியின் தந்தை, "ஏன் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள்" என இளைஞர்களிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும், வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை காலால் எட்டி உதைத்தும், ஹெல்மெட்டுகளை கொண்டும் அடித்தனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
போலீஸார் வழக்கு பதிவு
இதை பார்த்த மாணவிகள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். மதுரையில் பட்டப்பகலில் கல்லூரி முன்பு இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.