11 வருசமா எய்ம்ஸ் கட்டிட்டு இருக்காங்க.. மதுரை மெட்ரோ திட்டமும் நிராகரிப்பு.. கொந்தளிக்கும் மக்கள்!
மதுரை: கோவை மாவட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த திட்ட அறிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது இரு மாவட்டங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ஸ்டாலின், மதுரை மற்றும் கோவைக்கு No Metro என்று பாஜக அரசு நிராகரித்துள்ளது. பாஜகவை தமிழ்நாடு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய 2ஆம் நிலை மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல.

சென்னை மெட்ரோ பணிகளை தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல் மதுரைமற்றும் கோவையில் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயில் கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டதால் மதுரை மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சாமானிய பொதுமக்கள் பேசுகையில், மெட்ரோ ரயில் திட்டத்தை செய்ய மாட்டோம் என்று கூறியதற்கு ஒரு நல்ல காரணத்தை சொன்னால் கூட பரவாயில்லை.. போதுமான நிதியில்லை.. 2 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றலாம் என்றால் கூட பரவாயில்லை.. ஆனால் மக்கள் தொகை போதுமானதாக இல்லை என்கிறார்கள். ஏற்கனவே பாஜக மீது மதுரை மக்கள் பெரிய வெறுப்பில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் 11 ஆண்டுகளாக மதுரையில் எய்ம்ஸ் கட்டி வருகிறார்கள். இப்போது மெட்ரோ திட்டம் வராது என்றே சொல்லிவிட்டார்கள். இதற்கு ஒப்புதல் கொடுக்க இன்னும் 10 ஆண்டுகளாகும்.. அதன்பின் 25 ஆண்டுகளுக்கு தான் மெட்ரோ ரயில் திட்டம் வரும்.. 25 ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி எங்கேயோ இருக்கும்.. இப்போதும் மதுரையை ஒருவளர்ந்த கிராமம் என்கிறார்கள்.
அதனை உடைக்க வேண்டுமென்றால், மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். மதுரையில் உள்ள போக்குவரத்து நெரிசல் தீர வேண்டுமென்றால், மெட்ரோ ரயில் திட்டம் அவசியமான ஒன்று. இது மதுரை மக்களின் நியாயமான கோரிக்கை. மதுரை தென் மாவட்டங்களின் தலைநகர் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், மெட்ரோ திட்டம் நிராகரிப்பு என்பதை ஏற்க முடியாது.
தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை என்று பல்வேறு மாவட்ட மக்களும் மதுரைக்கு தொடர்ந்து வருகிறார்கள். மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டால், அத்தனை மாவட்டங்களுக்கும் உதவியாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும். இதுவொரு கனவுத் திட்டமாக உள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications