சீட் கிடைக்காததால் அதிருப்தி.. தனிக் கட்சி தொடங்குகிறாரா மதுரை கோபாலகிருஷ்ணன்?
மதுரை: மதுரையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான கோபாலகிருஷ்ணன் தனக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளார். அவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் பரபரக்கின்றன.
அதிமுகவில் இப்போது 37 சிட்டிங் எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதில் சிலர் உள்ளடி வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிட்டிங் எம்.பி. கோபாலகிருஷ்ணன். இவர் ஓ.பி.எஸ்.ன் ஆதரவாளர். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை நம்பிவந்தவர்கள் பலரும் இப்போது வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மட்டும் சீட் வாங்கி கொடுத்து விட்டு தங்களை கண்டுகொள்ளவில்லை என்ற கலகக் குரல்கள் அதிமுகவில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர் கோபாலகிருஷ்ணன்
இதில் ஓபிஎஸ் சின் தீவிர ஆதரவாளராக இருந்த மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணனும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது வட்டாரத்தில் விசாரித்தபோது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகி வந்தபோது அண்ணன் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்தார். மதுரையில் உள்ள இரு அமைச்சர்களின் சண்டை காரணமாக அண்ணனுக்கு வாய்ப்பு தவறி விட்டது.
யாதவர்கள்
இதனால் மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அண்ணன் வருத்தத்தில் இருந்து வந்தார். அப்போது அவரது சமுதாய மக்களான யாதவர்கள் அவரை வேறு ஒரு அமைப்பை தொடங்க சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அவரோ புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்ற யோசனையில் இருக்கிறார் என்றார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
ஒப்புக்காக பிரச்சாரம்
இந்நிலையில் ராஜ் சத்யனுக்காக அவ்வப்போது பிரச்சாரத்திலும் கோபாலகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். இன்று காலையும் பிரச்சாரத்திற்கு கிளம்பிய கோபாலகிருஷ்ணனிடம் நீங்கள் புதிய அமைப்பை தொடங்க உள்ளீர்களா என்று ஒன் இந்தியா தமிழுக்காக கேட்டோம் அப்போது நிறுத்தி நிதானமாக பதிலளித்த கோபாலகிருஷ்ணன் நான் அதிமுகவின் உண்மைத்தொண்டன். வேறு கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றார். இப்போது கூட பிரச்சாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
நேரம் வரும்போது பிரிவார்
இதனையடுத்து மீண்டும் அவரது வட்டாரத்தில் விசாரித்தபோது தேர்தல் நேரத்தில் அதிமுகவில் எந்த சலசலப்பும் வந்து விடகூடாது என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டது. அதனால் அவர் இப்போதைக்கு அமைதியாக உள்ளார் ஆனால் நேரம் வரும்போது புதிய அமைப்பு தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றே கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆக அதிமுகவில் மீண்டும் கலகக் குரல்கள் கேட்க தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தோன்ற தொடங்கிவிட்டன என்றே தெரிகிறது.