"திராவிட இனம்" ஆளுநரே.. யாரின் ரப்பர் ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்று அறிவோம்.. சு.வெ. ட்வீட்!
மதுரை: திராவிடம் ஒரு இனமே அல்ல என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாடு, தமிழ் மொழி, திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், சனாதனம் உள்ளிட்டவை குறித்து பேசிய பரபரப்பை கிளப்பினார்.
இதுமட்டுமல்லாமல் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை நேரடியாக குற்றம்சாட்டினார். அதேபோல் அமைச்சர் பொன்முடி உடனான மோதல், சட்டசபை தீர்மானங்களை கிடப்பல் போட்டுள்ளது தமிழக அரசியலை தொடர்ந்து கொந்தளிப்பான சூழலிலேயே வைத்துள்ளது.
அதே இடத்தில்.. அதே மாதிரி.. நேஷனல் லெவலில் திமுக போட்ட போடு.. குறுக்கே புகுந்த
திராவிட இனம்
இந்த நிலையில் நேற்று ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையாகியுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு என தெரிவித்தார்.
நீதித்துறை முடிவு
அதேபோல் லோக் ஆயுக்தா தினத்தையொட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ஆளுநர் என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கின்றன. அந்த குரல்கள் முக்கியமல்ல. நமக்கு இந்திய அரசியலமைப்பு மட்டுமே முக்கியமானது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள். ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா? இல்லையா?என்பதை நீதித்துறை முடிவு செய்யும்.
ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல
அதேபோல் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல. அரசியலமைப்பு விதி 200ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவைத் தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது என்று பேசி இருந்தார். தமிழக அரசு தரப்பில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சு.வெங்கடேசனின் பதிலடி
இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இரு பேச்சுகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ரவி அவர்களே, உங்கள் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் உங்கள் விருப்பம் ஈடேறாது. திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர்ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும் என்று விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர்
அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக பாஜக தலைவர் போல் செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற ஜனாதிபதியிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பி-க்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.