தூங்காநகரில் ‘நைட் விசிட்’ தொடரும்.. மதுரை DIGயாக சார்ஜ் எடுத்த ரம்யா பாரதி.. முதல்வரே பாராட்டினாரே!
மதுரை: மதுரை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரம்யா பாரதி ஐபிஎஸ், மதுரையிலும் நைட் விசிட்டை தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் சைக்கிளில் நைட் ரவுண்ட்ஸ் சென்று வந்த ரம்யா பாரதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றி வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி, சாதாரண உடையில் நள்ளிரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இணை ஆணையர் ரம்யா பாரதி ரோந்து வருவதால், போலீசார் அலெர்ட்டாக இருந்து வந்தனர்.

இரவு நேரங்களில் நகரில் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதாக ரம்யா பாரதி அப்போது தெரிவித்திருந்தார். ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி ரைட் ரவுண்ட்ஸ் செல்லும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அவரை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், தற்போது மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் ரம்யா பாரதி. மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத்தலைவராக (டிஐஜி) ரம்யாபாரதி, மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரம்யா பாரதி, "பழமையான தொன்மையான மாவட்டமான மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை மேற்பார்வை செய்வதே டிஐஜியின் முக்கிய பொறுப்பு. சென்னையில் நான் இரவு ரோந்து மேற்கொண்டதற்கான காரணங்களை சொல்லி இருந்தேன். இரவில் ரோந்து பணி என்பது காவல்துறையில் மிக முக்கியமான விஷயம். அது இங்கும் தொடரும்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பை பாதுகாக்க புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தென் மண்டலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள், சொத்துகள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கைகள் தொடரும்.
ஜாதியை மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ஜாதிய மோதல் தொடர்பான புகார் வந்தால் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் எப்போதும் பொதுமக்களின் நண்பராக இருக்கிறோம்.
பாதுகாப்பு பணிகளின்போது பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தலையாய கடமை என்பதை நிலைநிறுத்தி செயல்படுவோம். தமிழ்நாடு அரசு எந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதோ அதற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications