“வன்முறையை தூண்ட கூப்பிட்டால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள்" - முதல்வர் ஸ்டாலின்
மதுரை: "ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது.

மீண்டும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். ஸ்டாலின் பேசுகையில், "நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால் அவர்கள் வேறு அரசியலைப் பேசுகின்றனர். நான் உறுதியாகச் சொல்கிறேன்.. அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவற்றை முறியடிப்போம். சிதைப்போம்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாச்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி சமூகத்தை துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல.. அரசியல். கேடு கெட்ட மலிவான அரசியல். ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications