மதுரையில் ரூ.2 கோடி பணம் கேட்டு சிறுவன் கடத்தல்.. விரட்டிச் சென்ற போலீஸ்.. சினிமா பாணியில் சம்பவம்!
மதுரை: மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் போலீசார் விரட்டுவதை அறிந்து சிறுவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மதுரையில் சினிமா பாணியில் நடந்த ஆள்கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்ந்து கத்தி முனையில் ஒரு கும்பல் திடீரென கடத்திச் சென்றது.

இதையடுத்து, கடத்தல் கும்பல் அந்த மாணவனின் தாய் மைதிலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் உன் பையனை விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸுக்கு போனால் உன் மகனை இனிமேல் பார்க்கவே முடியாது என மிரட்டியுள்ளனர்.
எனினும் மைதிலி போலீசை அணுகினார். எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் கடத்தப்பட்டதாகவும், அந்த கும்பல் போனில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார் மைதிலி.
மைதிலி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை தேடினர். செல்போன் டவர் மூலமாக கடத்தல் கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்து விரட்டிச் சென்றனர்.
போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அந்த மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் விட்டு விட்டு தப்பிச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை மீட்ட காவல் துறையினர், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் பள்ளி மாணவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளது மதுரை மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரையில் பள்ளி மாணவன் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications