"என் அப்பாவையே விசாரிப்பீங்களா" சூறையாடப்பட்ட மதுரை போலீஸ் ஸ்டேஷன்.. தப்பித்து ஓடிய போலீஸ்!
மதுரை: மதுரையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முக்கிய கொலையில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், மது போதையில் போலீஸ் ஸ்டேஷனை சூறையாடி தப்பி சென்றுள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில், சில மாதங்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரபாகரன் என்பவரை தேடி வந்தனர்.

குற்றவாளியின் தந்தையிடம் விசாரணை
அவர்தான் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதன் காரணமாக பிரபாகரன் வீட்டில் சோதனை செய்ய போலீசார் சென்றிருக்கின்றனர். அப்போது பிரபாகரன் வீட்டில் இல்லாததால், அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த விவகாரம் பிரபாகரனுக்கு தெரிய வந்துள்ளது.
ஆத்திரமடைந்த பிரபாகரன்
தனது தந்தையை போலீஸ் ஸ்டேஷனுக்கு காவலர்கள் அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது கூட்டாளி அழைத்திருக்கிறார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் வீட்டிற்குள் நுழைந்து தந்தையை மிரட்டி போலீசார் அழைத்து சென்றுவிட்டதாக கூறி இருக்கிறார். இதன்பின் பிரபாகரன் மற்றும் அவரின் கூட்டாளி மதுபோதையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர்.
உயிர் தப்பிய போலீஸ்
அப்போது இரவு பணியில் இருந்து பால் பாண்டி என்ற போலீசாரை மிரட்டி இருக்கின்றனர். இதனால் அச்சமடைந்த பால் பாண்டி, உடனடியாக தனி அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டி கொண்டு உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார். இதன்பின் பிரபாகரன் தனது கூட்டாளியுடன் இணைந்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அத்தனை பொருட்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்.
ஆர்பி உதயகுமார் தடுத்து நிறுத்தம்
மொத்தமாக சேதப்படுத்திய இருவரும், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இரு நபர்கள் சேர்ந்து காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கைது செய்த போலீஸ்
இதன்பின் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்பி உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவருடன் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தர்ணா போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த விவகாரம் அப்பகுதியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications