நம்ம மதுரையா இது.. ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை.. அடையாளம் தெரியாமல் மாறிய ரேஸ்கோர்ஸ் மைதானம்!
மதுரை: ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் இன்னும் 8 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. சர்வதேச தரத்திலான டர்ப் தொடங்கி வீரர்களுக்கான ஓய்வறை, பார்வையாளர்களுக்கான கேலரி, விஐபி கேலரி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.
14வது ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் இருந்து 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

ஏற்கனவே ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர். இதனிடையே மதுரையில் சர்வதேச தரத்தினாலான ஹாக்கி மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மைதானத்தின் அத்தனை பணிகளும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி மைதான அரங்குகள் இருந்தாலும், பார்வையாளர்களுக்கான கேலரி, வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. புதிய டர்ப், உடைமாற்றும் அறை, முதலுதவி அறை, ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி, விஐபி கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக மட்டும் ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. மதுரையில் இதுவரை 2 முறை தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடந்துள்ளன. முதல்முறையாக சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகள் நடக்க உள்ளதால், ரேஸ்கோர்ஸ் மைதானமே மொத்தமாக மாறி இருக்கிறது. இது மதுரை மாவட்ட விளையாட்டு வீரர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடப்பதை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் தொடங்கி, விளக்கத்தூண், தெப்பக்குளம் என்று இளைஞர்கள், மாணவர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications