மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் எவ்வளவு முடிவடைந்துள்ளது? ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள்!
மதுரை: மதுரையில் ரூ.500 கோடியில் கட்டப்பட்டும் வரும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மதுரையில் தொழில்துறை மாற்றத்தில் முக்கிய பங்காக டைடல் பார்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் கவனமும் தென் மாவட்டங்களை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இருக்கும் நிலையில், பாஜக தரப்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இதன்பின் அடுத்ததாக தவெக தரப்பில் எலியார்பத்தியில் விஜய் தலைமையில் மாநாடு நடக்கவுள்ளது.

அதற்கான பணிகளில் தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை மாவட்டத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதேபோல் மதுரை மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, பொங்கல் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் இனி தோப்பூரில் வகுப்புகளில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம், கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றைக் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மதுரை டைடல் பார்க் பணிகள் விரைவுபடுத்தப்படாதது விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
2022ஆம் ஆண்டு மதுரை டைடல் பார்க் அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பின் போதே மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அனைத்து அனுமதிகளையும் பெற்று கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகளாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் பலரும் டைடல் பார்க் பணிகள் மீது விமர்சனம் வைக்க தொடங்கினர்.
திமுக ஆட்சி முடிவதற்கு டைடல் பார்க் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மதுரை டைடல் பார்க் பணிகள் இப்போதுதான் வேகம் எடுத்துள்ளன. தரைதளம் அமைக்கப்பட்டு, தற்போது முதல் தள கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மொத்தமாக 9.97 ஏக்கர் நிலத்தில் அமையும் டைடல் பார்க், ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளது.
இதனால் டைடல் பார்க் கட்டுமான பணிகள் முடிவடைய இன்னும் ஓராண்டு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டைடல் பார்க் எப்படி அமையும் என்ற மினியேச்சர் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த டைடல் பார்க்கில் சர்வதேச நிறுவனங்கள் தங்களது கிளையை தொடங்க அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications