எங்கெங்கும் மாணவர் போராட்டம்.. பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது
Recommended Video
மதுரை: பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கிறது மாணவர்கள் போராட்டம். பல்வேறு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருவதால் கல்லூரிகள் நடைபெறுவது சிக்கலாகியுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், பொள்ளாச்சி வழக்கினை சிறப்பு நீதிமன்றம் அமைத்து பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் தலையீடு இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு
போராட்டத்தின் போது குற்றவாளிகளுக்கு எதிராகவும், அரசு , காவல்துறையினருக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரிகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போராட்டத்தை தடுக்கும் வகையில் போலிசார் நூற்றுக்கணக்காணோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடைபெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஹாஸ்டலையும் மாணவர்கள் காலி செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.