அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு பார்க்கிங் செய்யலாம்?
மதுரை: நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிலையில், மதுரையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் எங்கு தங்களின் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்ற விவரங்களை மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா மதுரைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே அடையாளமாக திகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதன்பின் கடந்த 8ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன் தினம் தேரோட்டம் கொண்டாட்டமாக நடந்தது.

மதுரை வந்த கள்ளழகர்
இந்த நிலையில் அடுத்த பெரு நிகழ்வாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நாளை காலை நடக்கவுள்ளது. ஏற்கனவே கள்ளழகர் மேளதாளம் முழங்க தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை பார்த்த பரவசத்தில் கோவிந்தா கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து கள்ளழகர் மதுரை வந்துள்ள நிலையில், இன்று எதிர்சேவை நிகழ்வு தொடர்ந்து நடக்கவுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோரிப்பாளையம், கேகே நகர், அப்போலோ சிக்னல் பகுதிகளில் பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை பக்தர்கள் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
போலீசார் அறிக்கை
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகர போலீசார் தரப்பில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும், எந்த சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழியில் எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது.
பார்க்கிங் எங்கு?
ஓபுளா படித்துறை, வைகை தென்கரை, வைகை வடகரை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. அதேபோல் வாகனங்களில் வரும் பக்தர்கள் காந்தி மியூசியம் மைதானம், தங்கராஜ் சாலை, ரேஸ்கோர்ஸ் மைதானம், தமுக்கம் மைதானம், காமராஜர் பல்கலைக்கழக மைதானம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி கொள்ளலாம்.
எந்த சாலைகளில் அனுமதி இல்லை
அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை எந்தவொரு வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் அண்ணா பேருந்து நிலையம் முதல் கோரிப்பாளையம் வரை, பாலம் ஸ்டேசன் சாலை, கபடி நினைவு சிலை ரவுண்டானா முதல் கோரிப்பாளையம் வரை எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications