மதுரை பாண்டியன் ஹோட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டது தமிழக அரசு.. ஹப்பாடா
மதுரை: பாண்டியன் ஓட்டல் மதுரையில் பழமையான, புகழ்பெற்ற ஓட்டல்களில் ஒன்றாகும். பாரம்பரிய உணவுகளின் தரத்திலும் மிகவும் பிரபலமானது. எனவே மதுரைக்கு எந்த பிரபலங்கள் சென்றாலும், இந்த ஓட்டலுக்கு போகாமல் இருக்க மாட்டார்கள்.. இப்படிப்பட்ட ஃபேமஸ் ஓட்டல்தான் வழக்கு ஒன்றில் சிக்கி, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.. என்ன நடந்தது?
1968ல் தமிழக அரசு, மதுரை நகரின் முக்கிய பகுதியில் உள்ள சுமார் 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, பாண்டியன் ஓட்டல் நிறுவனம் ஓட்டல் நடத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு குத்தகையாக வழங்கியது.
அரசு அனுமதியுடன் அந்த நிலத்தில் ஓட்டல் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் 2008 ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் அதற்கு பிறகும் பாண்டியன் ஓட்டல் நிர்வாகம், அரசு நிலத்தில் தொடர்ந்து ஓட்டல் நடத்தி வந்தது.

மதுரை பாண்டியன் ஹோட்டல்
இதையடுத்து, அரசு தரப்பில், ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் நிலத்தை பயன்படுத்த விரும்பினால், அதனை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 2015ல் அரசு, அந்த 5.9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை என சொன்ன பாண்டியன் ஓட்டல் நிர்வாகம், அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
அரசு நிலம் ரூ.300 கோடி
இந்த வழக்கு பல வருட காலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. விசாரணையின்போது, நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த பிறகும் அரசு நிலத்தை கட்டணமின்றி பயன்படுத்தி வந்தது தவறு என்று குறிப்பிட்டது. மேலும், அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, 2023ல் ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது... அதில், பாண்டியன் ஓட்டல் அரசு நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நிலத்தை அரசு மீட்டெடுத்து, நிலுவையில் உள்ள வருவாய் மற்றும் கட்டணங்களை சட்டப்படி வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், தமிழக அரசு இதுபோன்ற அனைத்து அரசு நில குத்தகை ஒப்பந்தங்களையும் மீண்டும் பரிசீலித்து, பொதுநலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
5.9 ஏக்கர் புறம்போக்கு நிலம்
இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, கடந்த 2025 மே மாதத்தில் நீதிமன்றத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, பாண்டியன் ஓட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அதிகாரப்பூர்வமாக மீட்க ஆணை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை பாண்டியன் ஹோட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தற்போது மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஹோட்டல் இருந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது மீட்டுள்ளது.. நிலத்தை மீட்ட அடுத்த நாளே, 'ஓட்டல் தமிழ்நாடு' அலுவலகத்தை அங்கே நிறுவி புக்கிங் செயல்முறைகளையும் துவங்கி விட்டது..
ஓட்டல் பார்சூன் பாண்டியன்
பல ஆண்டுகளாக நீடித்து வந்த பாண்டியன் ஓட்டல் அரசு நில வழக்கு முடிவுக்கு வந்து, அரசு சொத்து மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஏற்கனவே இக்கழகத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 1, அழகர்கோவில் ரோட்டில் யூனிட் 2 ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது யூனிட்டாக ஓட்டல் பார்சூன் பாண்டியன் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications