மதுரை மாவட்டத்தில் மே 12 உள்ளூர் விடுமுறை.. சித்திரை திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெறுகிறது.

மே 1 ஆம் தேதி கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகன உலாவும், மே 2 ஆம் தேதி தங்கப்பள்ளத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள்கின்றனர். மே 3 ஆம் தேதி தங்க குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறி லீலை நிகழ்வு நடைபெறுகிறது.
மே 4 ஆம் தேதி, ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யும், நந்திகேஸ்வரர் மற்றும் யாளி உலா மே 5 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மற்றும் ஊடல் உற்சவம் வெள்ளி சிம்மாசன உலா மே 6 ஆம் தேதி நடைபெறும். மே 7 ஆம் தேதி திக் விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது.
சித்திரைப் பெரும் திருவிழாவின் 11ஆம் நாள் திருநாளான மே 9 ஆம் தேதி திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சித்திரை திருவிழாவில் மதுரை மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்கள் சித்திரை திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் நலன் கருதி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மே 12ஆம் தேதியை உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாளான மே 12 ஆம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications