மதுரை "எய்ம்ஸில்" மருத்துவ வகுப்புகள் தொடக்கம்.. எங்கே வைத்து வகுப்புகள் நடக்கும் தெரியுமா?
மதுரை: மதுரை எய்ம்ஸில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மருத்துவ வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரதமர் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ஜப்பான் நாட்டில் இருந்து பண உதவி கிடைப்பதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின் போது கடுமையாக கிண்டல் செய்தார். அடிக்கல் நாட்டிய செங்கல்லில் எய்ம்ஸ் என கூறி பிரச்சாரங்களில் கொண்டு சென்றார். இந்த வகையான பிரச்சாரம் அனலை கிளப்பியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல்லை உதயநிதி திருடிவிட்டார் என்றெல்லாம் பாஜகவினர் புகார் அளித்தனர்.

எய்ம்ஸ் கட்டுமான பணிகள்
இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு இந்த பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 150 மாணவர்கள் சேர்க்கை இருக்கும் ராமநாதபுர கல்லூரியில் 50 இடங்கள் எய்ம்ஸ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக இந்த கல்வி ஆண்டில் இந்த சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறோம் என அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
இதை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வர வேண்டும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துவங்கவில்லை என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சமாகும்.












Click it and Unblock the Notifications