"திராவிட மாடல்!" ஸ்டாலினின் மக்கள் செல்வாக்கை பொறுக்க முடியாத இந்துத்துவ சக்திகள்! விளாசும் வைகோ
மதுரை: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக அரசைப் பாராட்டிப் பேசினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
திமுக அரசை வெகுவாக பாராட்டிப் பேசிய வைகோ, அதேநேரம் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
திராவிட மாடல்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும் திராவிட மாடல் அரசைச் சகோதரர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதன் காரணமாகவே சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் வளர்ச்சிப் பாதையிலே கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் திராவிடம் மாடல் அரசுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தே வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில இந்துத்துவா சக்திகள் அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
வடநாடு
சுதந்திர தினத்தன்று இந்தூரில் கோட்சே உருவத்தைக் கொண்டு ஊர்வலம் நாட்டித்தி உள்ளனர். காந்தியைக் கொன்ற கொடியவனுக்கு ஊர்வலம் நடத்தும் அளவுக்கு இந்துத்துவா சக்திகள், சங்பரிவார் சக்திகள் வடநாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மத்திய அரசு நிறுவனங்களில் பணிகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக இணைந்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கான பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்.
சர்வாதிகாரப் பாதை
பிரபல ஆங்கில ஊடகத்தை அதானி வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஊடகங்களைக் கைப்பற்றி நாட்டை சர்வாதிகாரப் பாதையிலே கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க வேண்டியது திராவிட இயக்கத்தின் தலையாயக் கடமையாகும்.
கொடூர குற்றங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் கொடூர குற்றத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. திமுக ஆட்சியில் தான் அதிகரித்துள்ளது எனச் சொல்ல முடியாது. இளைஞர்கள் எளிதாக ஆயுதங்களை எடுப்பதும், கொலை செய்வதும் சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த நிலைமை 30 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. இதற்கு மிக முக்கிய காரணமே போதைப்பொருள் தான். மதுவையும் போதையையும் அடியோடு அகற்ற நான் மதுவை எதிர்த்து பிரசார பயணம் செய்தேன். மதுவே இளைய தலைமுறையைக் கெடுப்பதோடு இப்படிப்பட்ட படுகொலை நடக்கக் காரணமாக உள்ளது.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளது மிகப் பெரிய கொடுமை. கொலை செய்த கொலைகாரர்களை விடுதலை செய்துள்ளது, அரசின் கொடூர மனப்பான்மையை, கோரச் சிந்தனையைத் தான் காட்டுகிறது. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் உண்மை வெளிவரும். அதில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்.
நேதாஜி
சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்படி உயிரிழந்தார் என்பது இன்னும் கூட மர்மமாக உள்ளது. ஆனால், எல்.முருகன் அவரது நினைவு நாள் குறித்து ட்வீட் செய்துள்ளார். நான் ஜெயிலில் இருந்த போது அது குறித்து ஆய்வு செய்து ஐந்து வாரம் தொடர்ந்து எழுதி வந்தேன். அவர் எப்படி உயிரிழந்தார் எனத் தெரியாமல் அவரது நினைவு நாள் கொண்டாடுவது என்பது அவர்களுடைய (பாஜகவினர்) அறியாமையைக் காட்டுகிறது" என்றார்.