குழப்பம் செய்யவே தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஆளுநரே.. தேவர் பற்றி தெரிஞ்சிக்கோங்க.. வைகோ விளாசல்!
மதுரை : தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு ஆளுநர் வந்திருக்கிறார், அவரைப் போன்றவர்கள் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சாதி மதத்துக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை, தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

என் வீட்டுக்கு வந்திருக்கிறார்
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, "இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்தப் படையினர் சிட்டகாங் எல்லை வரை தீரத்துடன் போரிட்டனர். அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கினார். நான் சிறுவயதில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு தேவர் வந்திருக்கிறார்.

46 ஆண்டுகளாக வருகிறேன்
அவர் மீது எனக்கு பற்று-பாசம் உண்டு. நான் கடந்த 46 ஆண்டுகளாக தேவர் குருபூஜையில் பங்கேற்று வருகிறேன். கொரோனா பாதிப்பின் போது ஒரு ஆண்டு வரவில்லை. அதேபோல சிறைச்சாலையில் இருந்ததால் ஒரு ஆண்டு வர முடியவில்லை. 46 வருடங்களாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன். அவர் கடைப்பிடித்த ஒழுக்கம்; சொல் ஒன்று செயல் ஒன்று இல்லை என்ற அந்த இலக்கணம், அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க என்று சொல்லி அவருக்கு ஆண்டுதோறும் இங்கே வந்து மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.

ஒரு கவர்னர் வந்திருக்கிறார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டவர். தேவரின் பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே தேதியில் அமைந்த தெய்வீக அம்சத்துக்கு உரியது. தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் ஜாதி, மதம், இனம் வேறுபாடுகளை கடந்து சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். இங்கு ஜாதி, மதத்துக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். கவர்னர் அபாண்டமாக, அவதூறாக பேசுகிறார். அவர் முத்துராமலிங்கத் தேவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆலய நுழைவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வைத்தியநாத அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டல் விடுத்தது. அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்.

விரட்டியடித்த தேவரின் துண்டு பிரசுரம்
அதில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும். அவர்களை எவரேனும் தடுத்தால் நானே அங்கு வருவேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். பசும்பொன் தேவரின் துண்டுப்பிரசுரம், எதிர்ப்பாளர்களை விரட்டி அடித்தது. தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இங்கு துவேஷங்களுக்கு இடமில்லை. தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்" எனத் தெரிவித்தார்.

ஆளுநர் பற்றி விமர்சனம்
நேற்றும் ஆளுநரை விமர்சித்துப் பேசியிருந்தார் வைகோ. "ஆளுநரைப் போன்ற ஒரு உளறல் பேர்வழியை இதுவரைநான் பார்த்ததே இல்லை. உளறிக் கொண்டே இருக்கிறார். சனாதன தர்மம்தான் இந்த நாட்டினுடைய இலக்கியம் என்கிறார். அவர் முழுக்க முழுக்க ஒரு சனாதனவாதியாக மாறி, இந்துத்துவா பிரச்சாரகராக மாறிவிட்டார். ஒரு இந்துத்துவா பிரச்சாரகரைத்தான் ஆளுநராக இங்கே போட்டு வைத்திருக்கிறார்கள். அவருடைய உளறலுக்கு கணக்கே இல்லை" என விமர்சித்தார்.

தேவரை வணங்கிய ஆளுநர்
ஆளுநர் ரவி, முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மலர்தூவி, கைகூப்பி வணங்கி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications