மதிமுக மாநாடு.. மதுரையில் என்ன பேசப்போகிறார் வைகோ.. ஆர்வத்தோடு குவியும் தொண்டர்கள்
மதுரை: மதிமுகவின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்ற பின்னர் மதுரையில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. வைகோ, துரை வைகோவின் பேச்சினை கேட்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் மதிமுகவினர் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, மதிமுக சார்பில், மாநாடு நடத்துவது வழக்கம். அவரது 115-வது பிறந்த நாளான இன்று அக்கட்சி சார்பில், மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. மதுரை விமான நிலையம் அருகிலுள்ள வலையங்குளம் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி, மாலை 3 மணிக்கு மாநாடு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 3 முதல் 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் கட்சி கொடியேற்றப்படுகிறது. திராவிட இயக்க சுடரை உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வராகவன், மாநாட்டு தலைவர் அர்ஜுனராஜ் ஏற்றுகின்றனர். மதுரை புறநகர் மாவட்ட செயலர் மார்நாடு, தேனி மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன் முன்மொழிகின்றனர். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலர் ஜெயராமன், சிவகங்கை மாவட்ட செயலர் மனோகரன் , ராமநாதபுரம் மாவட்ட செயலர் சுரேஷ் வழிமொழிகின்றனர்.
தொடர்ந்து, திராவிட இயக்க முதல் மூவர், தந்தை பெரியார், மொழிப்போர் தியாகிகள், அண்ணா படத்திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. துணை பொதுச் செயலர் ராசேந்திரன் மாநாட்டை திறந்து வைக்கிறார். வரவேற்புக்குழு தலைவர் புதூர் பூமிநாதன் எம்எல்ஏ வரவேற்கிறார். இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலாம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்க சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச் சூழல் சவால்கள், அண்ணா ஏற்றிய அறிவுச் சுடர், திராவிட இயக்க மகளிர், மொழிப்போர் உரிமைப் போராட்டம், நிதி நீர் உரிமைப் போரில் வைகோ, நாடாளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கு நமது இலக்கு போன்ற தலைப்புகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.
ஆடிட்டர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், துரை. வைகோ, மல்லை. சத்யா, கணேசமூர்த்தி எம்பி, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, சின்னப்பா எம்எல்ஏ, ரகுராம் எம்எல்ஏ ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர். பொதுச் செயலாளர் வைகோ, மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். மாநகர் மாவட்ட மதிமுக செயலர் எஸ்.முனியசாமி நன்றி கூறுகிறார்.
துரை வைகோ கட்சியின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில் அவருக்கு இது முதல் மாநாடாகும். மாநாட்டுக்காக மாநிலம் முழுவதும் இருந்த மதிமுகவினர் பல்லாயிரக்கணக்கானோர் மதுரைக்கு வந்துள்ளனர். இம்மாநாடு துரை.வைகோவின் அரசியல் அங்கீகாரத்துக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று மதிமுகவினர் தெரிவித்துள்ளனர். மதிமுக வலுவாக வேர் ஊன்றி இருக்கும் தென் தமிழகத்தில் மாநாடு நடப்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன












Click it and Unblock the Notifications