மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி தவறான விஷயம்.. அமைச்சர் மா.சு!
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தவறு என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலாண்டு மாணவர்கள் உறுதிஏற்பு நிகழ்வு நடந்தது.

கல்லூரி
கல்லூரியின் மாணவர்கள் சங்கத் தலைவர் உறுதிமொழியை வாசிக்க அதை மற்ற மாணவர்கள் திருப்பி வாசித்தனர். ஆங்கிலத்தில் படிக்கப்பட்ட அந்த உறுதியேற்பில் ஹிப்போகிரேட்டீஸ் பெயருக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் பெயரில் உறுதிமொழி எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமஸ்கிருதம்
அதிலும் அமைச்சர்கள் முன்பே சமஸ்கிருதத்ததில் உறுதிமொழி ஏற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழிக்காக தமிழகமே போராடி வரும் நிலையில் தமிழகத்தில் அரசு கல்லூரியில் அமைச்சர்கள் முன்பு இப்படி சம்பவம் நடந்தது குறித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கல்லூரி முதல்வர்
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கூறுகையில் பொதுவாக முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் போது மாணவர் சங்க தலைவர்தான் உறுதிமொழியை வாசித்தார். அவர் தேசிய மருத்துவ ஆணையத்தின் வெப்சைட்டில் இருந்ததை அப்படியே பிரிண்ட் போட்டு கொடுத்து வாசித்துவிட்டார். இது தெரியாமல் தவறுதலாக நடந்து விட்டது என்றார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
எனினும் இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனிடம் மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த நிலையில் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

விசாரணை
இதுகுறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றிருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி படித்து மருத்துவர் என்ற நிலையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உறுதிமொழி ஏற்று மருத்துவர்களாகும் நடைமுறை மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது தவறு.

கல்லூரி முதல்வர்
கல்லூரி முதல்வர் தவறுதலாக நடந்துவிட்டதாக சொன்னாலும் இது எத்தனை சென்சிட்டவான விஷயம். இதில் கவனக்குறைவு ஏற்பட்டிருக்கலாமா, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இது போல் சர்ச்சைகள் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டாமா? தவறுதலாக நடந்தது என்றால் யார் தவறு செய்தது, யார் செய்ய சொல்லியது? பொதுவாக ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிதான் ஏற்கப்படும். அண்மையில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வில் கூட ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்கப்பட்டது என்றார்.
Recommended Video

சமஸ்கிருத சர்ச்சை
மேலும் இந்த சமஸ்கிருத சர்ச்சை குறித்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கூறினார்களா என்ற கேள்விக்கு அவர் என்னவென தெரியவில்லை. அவர்கள் பேசவில்லை. இன்று காலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் பார்த்தேன். அதை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் மா சுப்பிரமணியன். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications