பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த போது.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இதை நோட் பண்ணீங்களா
மதுரை: இலங்கை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் பிரதமரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் வந்து வரவேற்று வழியனுப்பி வைத்தார். அப்போது அமைச்சர் கருப்பு நிற மாஸ்க் அணிந்து இருந்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி இன்று காலை தமிழ்நாடு வருகை தந்தார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி
தொடர்ந்து பாம்பன் புறப்பட்ட பிரதமர் மோடி, கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார். அந்த தூக்கு பாலம் வழியாக ஒரு ரயிலையும், கப்பலையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பாலத்தில் நடைபெற்ற போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார்.
கருப்பு நிற மாஸ்க்
அதை தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்திருந்தார். இதையடுத்து ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ.8 ஆயிரத்து 300 கோடியில், பல்வேறு ரயில், சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மதுரை விமானம் நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிரதமர் மோடியை வழியனுப்ப சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருப்பு மாஸ்க் அணிந்து இருந்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தமிழக்த்திற்கு போதிய நிதி வழங்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டி வருவதாகவும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தென் மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை காட்ட முயற்சிப்பதாகவும் மத்தியில் ஆளும் பாஜக மீது தொடர் விமர்சனங்களை திமுக அரசு முன்வைத்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் பிரதமரை வழியனுப்பி வைக்கும் போது கருப்பு நிற மாஸ்க் அணிந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் சென்றது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
இதற்கிடயே, தமிழக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ராமேஸ்வர பயணம் குறித்தும் தொடங்கி வைத்த திட்டங்கள் தொடர்பாகவும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:-
"ராமேஸ்வரத்தில் மறக்க முடியாத ராம நவமி! புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் அறிமுகமும் அதே அளவு சிறப்பானதாகும். இதோ, சில முக்கிய அம்சங்கள்" என்று வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பன் தூக்கு பாலத்தை கப்பல் மற்றும் ரயில் கடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும் ராமநாத சுவாமி கோயிலில் வழிபட்டது தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications