எதை எல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் தீட்சிதர்கள் செய்கிறார்கள்.. அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
மதுரை: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா நாட்களில் நடராஜர் கோவிலில் மூலவராக இருக்கின்ற நடராஜனே தேருக்கு வந்து விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி இல்லை எனத் தீட்சிதர்கள் திடீரென அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தனர். பக்தர்கள் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கனகசபையில் அனுமதி கிடையாது என தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்ற அறநிலையத்துறை அதிகாரி சரண்யா சென்றபோது, தீட்சிதர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "சிதம்பரம் கோவிலில் நிர்வாக அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தகராறு செய்துள்ளனர். அறநிலையத் துறையை கலந்து ஆலோசிக்காமல் அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையது அல்ல.
சிதம்பரம் கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய அறநிலையத்துறையும் ஆணை பிறப்பித்துள்ளது. ஆகம விதிப்படி எவையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றை எல்லாம் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு வழிபட வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம். மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் வரும்போது தான் பிரச்னை வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications