மாவட்டச் செயலாளர்களை வைத்து திமுக நாடகம் நடத்துகிறது... அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
மதுரை: மாவட்டச் செயலாளர்களை வைத்து திமுக நாடகம் நடத்தி வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை விளாங்குடி பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

கோயில்களை மூடி வைக்க வேண்டும் என்ற எண்ண அரசுக்கு இல்லை என்றும், கொரோனா பரவல் காரணமாகவே இந்த விவகாரம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வழிபாட்டுத் தலங்கள் திறப்பது பற்றி முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என அவர் கூறினார்.
திமுகவினர் பெற்ற 98,000 மனுக்களில் எந்த மனுவும் கூட்டுறவுத்துறை தொடர்பானது இல்லை என்றும், அரசாங்கத்துடன் ஒரு கட்சியால் போட்டிபோட முடியாது எனவும் திமுகவை அவர் சாடினார். மேலும், மாவட்டச் செயலாளர்களை வைத்து ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுக நாடகம் நடத்தி வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடினார்.
இதனிடையே தனியார் பள்ளிகளில் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்டாயப்படுத்தி பள்ளிக் கட்டணம் வசூலிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதை சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications