மதுரை சிட்னியை போல் மாறும்... அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் உறுதி
மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை போல் மதுரை விரைவில் மாறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் உறுதியளித்துள்ளார்.
மாசில்லா மதுரை திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ரோம் நகரை உருவாக்கியது போல் மதுரையை நல்ல மதுரையாக, மாமதுரையாக மாநகராட்சி அதிகாரிகள் உருவாக்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இவரது புகழாரத்தை கேட்டு அருகில் இருந்த அதிகாரிகளே கூச்சத்தில் நெளிந்தனர். மதுரை ஒரு தொண்மையான நகரம் என்றும், அதிலுள்ள பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதை அவர் கூறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என கடந்த 6 மாதத்திற்கு முன் தெரிவித்திருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியது. இப்போது மீண்டும் சிட்னி நகரை கையில் எடுத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
இந்தாண்டு இறுதிக்குள் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காதவாறு மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவடையும் என்றும், மதுரை மாநகராட்சி பணிகளை பாராட்டி மதுரை இளைஞர்கள் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மதுரை சிறந்த நகரமாக தேர்வு செய்ய இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை மதுரை மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார். மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதன் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications