நீங்க நம்பலையா? நம்புங்க.. சனாதனம் ஒழிந்தால் 'அதுவும்' தானாக ஒழிந்துவிடும்! உதயநிதி பொளேர்
மதுரை: சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தீண்டாமையை ஒழிப்பதில் சனாதனத்தின் பங்கு குறித்தும் அவர் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில் பாஜகவினர் உதயநிதியை டார்கெட் செய்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிய விளக்கம் இல்லை என்று கூறியிருந்தார். அதேபோல சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா?நம்புங்கள், சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்த கூட்டணியின் சில தலைவர்கள் சனாதனத்தை வெளிப்படையாக ஆதரித்து பேசி வருகின்றனர். இப்படி இருக்கையில் உதயநிதி ஸ்டாலினின் கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications