7.5% இட ஒதுக்கீடு விவகாரம்.. முதலமைச்சருக்கு 'சமூகநீதி காவலர்' பட்டம்.. அமைச்சர் உதயகுமார் தகவல்..!
மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி காவலர் பட்டம் சூட்டி புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.
மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வெற்றி பெற்றதற்காக அவர் இந்த பட்டத்தை சூட்டியிருக்கிறார்.
ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம், காவிரிக் காப்பாளர் என்ற பட்டம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
7.5% உள் ஒதுக்கீடு
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பது போல் தெரியவில்லை. இதனால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதனை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பினார் முதல்வர்.
அரசாணை வெளியீடு
ஆனால் அந்த மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தயக்கம் காட்டியதால் 7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் முதலமைச்சர். இதையடுத்து வேறு வழியின்றி ஆளுநரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜை சற்று உயர்த்தியுள்ளது.
அம்மா பேரவை
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் மதுரையில் நடத்திய கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி காவலர் என்ற பட்டத்தை சூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஜெயலலிதா 69% இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது அதே போல் எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி காவலர் பட்டம் சூட்டப்பட்டுள்ளது.
வி.பி.சிங்
இதனிடையே முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சமூக நீதி காவலர் என போற்றப்படும் நிலையில், மீண்டும் அதே பெயரில் முதலமைச்சருக்கு அமைச்சர் உதயகுமார் பட்டம் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் உதயகுமாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.