முதலமைச்சரிடமிருந்து வந்த போன் கால்! மதுரையிலிருந்து நாமக்கல்லுக்கு சீறிய உதயநிதி ஸ்டாலின் கார்!
மதுரை: மதுரை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது நிகழ்ச்சிகளை வேகவேகமாக முடித்துக் கொண்டு இரவோடு இரவாக நாமக்கல் சென்று நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
மீண்டும் தனது மதுரை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து மதுரை புறப்பட்டுச் சென்றுவிட்டார் அமைச்சர் உதயநிதி.

திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டுமான பணிகளை பார்வையிடுதல், மாவட்ட நிர்வாக கலந்தாய்வு கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு மதுரை சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அதன் படி முதல் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்த எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மதுரை மாநகர திமுக மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக ஏற்பாடு செய்துள்ள நிாழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனிடையே தான் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தாயார் லீலாவது மறைவு குறித்த தகவல் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சரிடம் இருந்து போன் கால் வந்திருக்கிறது. இதையடுத்து மதுரையில் தனது நிகழ்ச்சிகளை நேற்று மாலை வேகமாக முடித்துக் கொண்ட உதயநிதி, திண்டுக்கல், கரூர் வழியாக சாலை மார்க்கமாக பயணித்து இரவு 9.30 மணிக்கு மேல் நாமக்கல்லை சென்றடைந்தார்.

அவருடன் கொங்கு மண்டல அமைச்சர்களான வெள்ளக்கோவில் சாமிநாதனும், முத்துசாமியும் உடன் சென்றனர். உதயசந்திரன் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சில நிமிடங்கள் அங்கிருந்த அவர், மீண்டும் தனது தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக உடனடியாக மதுரை திரும்பிவிட்டார்.
உதயநிதி ஸ்டாலினுக்கும், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கும் ஏழாம் பொருத்தம் என கூறப்பட்ட நிலையில் அது போலெல்லாம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் உதயநிதியின் நாமக்கல் விசிட் அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications