மதுரையில் நடக்கும் அதிகார மோதல்... செல்லூர் ராஜூ vs ஆர்.பி.உதயகுமார்
மதுரை: அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமாருக்கு இடையே நடக்கும் அதிகார மோதலால் மதுரையில் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களில் இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் இங்கெல்லாம் அதிமுகவில் இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளன.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பாக மதுரையில் இரண்டு அமைச்சர்களுக்கிடையே பனிப்போர் நடப்பதால் மாவட்ட நிர்வாகம் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் புலம்புகிறது.

அதிகார மோதல்
மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் அவர்களுக்கு இடையே நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு உதாரணமாக, ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ முட்டுக்கட்டை போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபயணம்
அதிமுகவின் சாதனைகளை விளக்கும் ஜோதி ஏந்திய தொடர் நடைப்பயண நிகழ்ச்சியை மதுரை மாவட்டத்தில் ஏற்பாடு செய்து நடத்தி முடித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை மதுரை மேற்கு தொகுதிகுட்பட்ட பகுதியில் நடத்த அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ரத்து
அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தொகுதியில் தன்னை மீறி நிகழ்ச்சி நடத்தினால் அது பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனக் கூறியதாகவும், இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அமைச்சர் உதயகுமாரிடம் பேசி விழாவை ரத்து செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

உதயகுமார் கோபம்
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த விவகாரத்தை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார். அவரோ, அதனைக் கேட்டுக்கொண்டு உள்ளாட்சித் தேர்தல் வருவதால் அதற்கு பின்னர் பேசிக்கொள்வோம் என சமாதானப்படுத்தினாராம்.












Click it and Unblock the Notifications