'எத்தனையோ பேரை மந்திரியாக்கினேன்'.. 'எவனுக்கும் நன்றியில்லை'.. ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி ஆதங்கம்..!
மதுரை: எத்தனையோ பேரை தாம் மந்திரியாக்கி உள்ளதாகவும் ஆனால் யாருக்கும் நன்றியில்லை எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரையில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர் உணர்ச்சி பிழம்பாக வெடித்து தன்னால் பயனடைந்து இப்போது அருகில் வராதவர்களை ஒருமையில் சாடினார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சை யாராவது ஏற்பார்களா என்றும் அவர் வினவினார்.

மு.க.அழகிரி பேச்சு
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்தபோது தென்மாவட்டங்களை சேர்ந்த 12 மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் தாம் எங்கு சென்றாலும் வந்து வரவேற்பு கொடுத்து நின்றதாகவும் அவர்கள் எல்லோரும் நடித்திருக்கிறார்கள் என்பது பிறகு தான் தமக்கு தெரிந்ததாகவும் வேதனைத் தெரிவித்தார்.

ஸ்டாலின் தலைமை
அப்பாவுக்கு பிறகு நீதான் எல்லாம் என மு.க.ஸ்டாலினிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே தாம் கூறிவிட்டதாகவும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தாம் தயார் என்று கூறியும் தன்னை அவமானப்படுத்தியது நியாயமா என கேள்வி எழுப்பினார். பதவியை எந்தக் காலத்திலும் தாம் விரும்பியதில்லை எனவும் நினைத்திருந்தால் எப்போதோ பெரிய பதவிகளை பெற்றிருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

மனக் குமுறல்
சில நாட்களில் கட்சியில் தன்னை சேர்ப்பதாக கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அதற்குள் நோய்வாய்பட்டு அவர் மரணித்துவிட்டார் என தழுதழுத்தார். கடந்த 7 ஆண்டுகளாக மனதில் பூட்டி வைத்திருந்த குமுறல்களை இன்று கொட்டித் தீர்த்த அழகிரி, தாம் என்ன முடிவெடுத்தாலும் அதை தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கலைஞருக்கு நிகரான
இதனிடையே திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலைஞரையே மிஞ்சிவிட்டாய் என ஸ்டாலினை நோக்கி துரைமுருகன் பேசியதை குறிப்பிட்ட அழகிரி, துரைமுருகன் பேச்சை யாராவாது ஏற்பார்களா என்றும் அவர் பேச்சை ஒருவரும் ஏற்கத் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார். கலைஞருக்கு நிகரான திறமை யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications