M.K Stalin: "நான் தாத்தா இல்லம்மா.. மாமா".. கிராம சபை கூட்டத்தில் சிறுமியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்
விருதுநகர் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் கலகலப்பு பேச்சு.
மதுரை: கிராம சபைக் கூட்டத்தில் பட்டயக் கிளப்பி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்!
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை கூட்டி மக்களிடம் நேரடியாக பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கும்போதும் அவர்களின் கருத்தை கேட்டு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்.
ஆனால் கிராம சபை கூட்டம் என்பது சீரியஸ் விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் நமக்கு நாமே ஸ்டைல் ஸ்டாலினிடம் வந்து போகிறது.
கலகலப்பு பேச்சு
எளிமையாக திண்டு போல அமைக்கப்பட்டிருக்கும் மண் மேடையில்தான் ஸ்டாலின் உட்கார்ந்து பேசுகிறார். பக்கத்தில் யாரும் இருப்பதில்லை. மைக்கை பிடித்து கொண்டு அவர் மட்டும் பேசுகிறார். பிறகு திடீரென கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் நடந்தபடியே பேசுகிறார். சீவி சிங்காரிச்சு கூட்டத்துக்கு வந்திருக்கும் பெண்கள், சீரியலை விட்டுவிட்டு வந்திருக்கும் என பெண்கள் என மகளிர் அணிக்கு ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைத்து கூட்டத்தை தொடங்குகிறார்.
முண்டியடிக்கும் கூட்டம்
ஸ்டாலினை நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக கூட்டம் முண்டியடிப்பதை பார்த்து அவர்களுடன் நின்று கைகுலுக்குகிறார். இதை விட இன்னொரு முக்கியமான விஷயம், கிராம சபை கூட்டம் ஒன்றில், ஒரு பாட்டி ஸ்டாலின் அருகில் வந்து நின்றார்.
தொட்டுப் பார்க்கணும்
"என்னம்மா கோரிக்கை, மனு எங்கே?" என்று ஸ்டாலின் கேட்க, "மனுவெல்லாம் இல்ல ராசா.. உன்னை தொட்டு பாக்கதான் வந்தேன்" என்று கையை இறுக்கமாக பிடித்து விட்டு போனது. இப்படிதான் ஸ்டாலினின் கிராம சபை மக்களை ஈர்த்து வருகிறது. இன்றைக்கு கூட ஒரு சுவாரஸ்யம் நடந்திருக்கிறது.
வணக்கம் தாத்தா
விருதுநகரில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடையே பேசிவிட்டு, அவர்களின் மனுக்களை ஸ்டாலின் பெற்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருத்தி, ஸ்டாலினைப் புகழ்ந்து பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். அவள் பெயர் நசிதா. எல்கேஜி படிக்கிறாள். பிறகு பாடி முடித்துவிட்டு "ஸ்டாலின் தாத்தா வணக்கம்" எனக் கூறினார்.
கைதட்டி ஆரவாரம்
அதைக் கேட்டதும் ஸ்டாலினுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சத்தம்போட்டு சிரித்துவிட்டார். கூட்டத்தினரும் சிரித்து விட்டனர். அந்தச் சிறுமியை கையசைத்து தன்னருகே ஸ்டாலின் கூப்பிட்டார். பிறகு, "'நான் தாத்தா இல்லம்மா... மாமா' என்று சிரித்தபடியே ஸ்டாலின் கூறினார். இதைக் கேட்டதும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
கஷ்டம்தான்!
அது சரி.. மூத்த பேரனுக்கு 14 வயது ஆகி, ஸ்டாலின் நிஜ தாத்தா ஆகிவிட்டது உண்மை என்றாலும், அடிக்கடி டீ-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் போட்டு கலக்கி வரும்போது "தாத்தா" என்பதை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்!!