குடும்பத்திற்கு ரூ 2.5 லட்சம் கடன் இருக்கு.. ஆனா ரூ 7 லட்சம் திட்டங்கள் செய்துள்ளோமே.. அதிமுக
மதுரை: ஒரு குடும்பத்தின் மேல் 2 லட்சம் கடன் வைத்திருந்தாலும் 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை செய்துள்ளோமே என திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக புதிய கட்டடத்தை இன்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு கூடுதலாக கலைக் கல்லூரிகள் அமைக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை, நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்வைத்துள்ளோம். சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் கருத்துக்களைக் கூறுவதற்கு உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சட்டமன்றம் சிறப்பாக செயல்படும்.

சட்டசபையில் எதிர்க்கட்சியினர்
ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். இது மக்களுக்கான அரசு என கூறுகிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உரிய நிதி கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி கிடைக்காதபட்சத்தில் அதனை போராடி பெறுவதற்கான வலிமை எங்களிடம் உள்ளது என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
கொடநாடு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில் இதைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். முடிந்துவிட்ட வழக்கை மீண்டும் தொடர்கிறார்கள். மேலும் இதைப் பற்றி நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த வழக்கை மீண்டும் தொடுப்பது நியாயமாகாது. ஏதோ உள்நோக்கத்தோடு இந்த வழக்கு மீண்டும் தொடுக்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் அதனை திசை திருப்புவதற்காக இந்த வழக்கு தொடுக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத் தொடர்
தமிழக அரசு தேர்தல் அறிக்கையினை நிறைவேற்றி இருக்க வேண்டும். தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையானது ஒரு விஞ்ஞான ரீதியான நிதிநிலை அறிக்கையே தவிர, மக்கள் நலன் சார்ந்த நிதி நிலை அறிக்கை அல்ல. அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது ஒருவருக்கு தான் கடன் தொகை கணக்கிடுவோம், ஆனால் தற்போது உள்ள நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு குடும்பத்திற்கு ரூ 2.56 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

7 லட்சம் ரூபாய்
ஆனால் இந்த 2,56 ,000 ரூபாய் கடனை காட்டிலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டுதான் இந்த இரண்டு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கடனை பெற்றுள்ளோம். அவர்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறோம் நாங்கள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளோம். ஆனால் அதற்கு எவ்வளவு நலத்திட்ட உதவிகள் செய்து உள்ளோம் என்பதனை வெள்ளை அறிக்கையில் அறுதியிட்டு பார்க்க வேண்டும் என்றார்.

மெட்ரோ ரயில்
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என தமிழக அரசு கூறியது குறித்த கேள்விக்கு ராஜன் செல்லப்பா கூறுகையில் மெட்ரோ ரயில் மதுரைக்கு கட்டாயமாக்க வேண்டும். சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்காக அதனை ரத்து செய்துவிடக் கூடாது. மதுரையில் அனைத்து தரப்பினரிடையே இதற்கான வரவேற்பு அதிகம் உள்ளது என்றார் ராஜன் செல்லப்பா.












Click it and Unblock the Notifications