தமிழ் கேள்வித்தாளுடன்.. விரைவில் ரயில்வே பொறியாளர் பதவி உயர்வு மறு தேர்வு! சு.வெங்கடேசன் வரவேற்பு
மதுரை: கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலை பொறியாளர் பதவி உயர்வு தேர்வில் தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லாதது விதி மீறல் என்றும், எனவே தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரியிருந்தார். இதனையடுத்து தமிழ் வினாத்தாளுடன் மறுத்தேர்வு நடத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.
அதாவது, "ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலை பொறியாளர் பதவி உயர்வு காலியிட தேர்வில் கேள்வித்தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டும்" என்று கோரிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகளுக்கான, எழுத்துத் தேர்வுக்கான நடைமுறைகளை பொறுத்தவரை, கேள்வித்தாள்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது என 15 பிராந்திய மொழிகளில் வழங்கப்பட வேண்டும்.
மேலும் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் (negative marking) என்ற விதிமுறை இல்லை. இதனால், எந்தவொரு கேள்விக்கும் தவறான பதிலளித்தால், அதற்கான மதிப்பெண்கள் கழிக்கப்படாது. பல்வேறு மண்டலங்களில் தேர்வுகளுக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, தேர்வின் செயல்முறைகள் நடைபெறும். எழுத்துத் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.
தேர்வின்போது எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தவோ, கொண்டுவரவோ கூடாது. இந்த விதியை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விதி. ஆனால் ஆக.10ம் தேதி நடந்த தேர்வில் தமிழ் வினாத்தாள் வழங்கப்படவில்லை. எனவேதான் மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தனது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு தமிழ் வினாத்தாளை உள்ளடக்கி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்திருப்பதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில்,
"தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்பட்டது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லாதது விதிமீறல் எனவே தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தேன்.
எனது கோரிக்கை ஏற்கப்பட்டு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கேள்வித்தாளுடன் விரைவில் மறு தேர்வு நடத்தப்படும். என் கடிதத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த இரயில்வே அமைச்சருக்கு நன்றி" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications