திருப்பரங்குன்றம்: “கார்த்திகை தீபத்தை.. கலவர தீபமாக மாற்ற முயலுகிறார்கள்” - சு.வெங்கடேசன் எம்.பி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது, சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். இது விவாதங்களை கிளப்பியிருக்கும் நிலையில், "கார்த்திகை தீபத்தை.. கலவர தீபமாக மாற்ற முயலுகிறார்கள்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

வழக்கின் பின்னணி என்ன?
இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூண் அமைந்திருக்கிறது. இந்த தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது. எனவே இந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் விளக்கை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறையின் வாதங்களையும் கேட்டார். "பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. எனவே, ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று இந்து சமய அறநிலையத்துறையில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, நேரடியாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இன்று மாலை இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், சிக்கந்தர் தர்காவுக்கு15 மீட்டர் தொலைவில் உள்ள தீப தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார். உயிர்பலி தொடர்பான விஷயத்தில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரியதாக வெடித்திருந்தது. இந்நிலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக வந்துள்ள உத்தரவு விவாதங்களை கிளப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications