ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரையும் சந்தித்து சமரசம் பேசத் தயார்.. நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்!
மதுரை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரிடம் நேரில் சந்தித்து சமரசம் பேசுவதற்கு தயார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு சில மன வருத்தங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை எங்களின் அகில இந்திய தலைமையுடன் பேசி சரி செய்து தீர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் பேசுகையில், அண்ணாமலை தான் எங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அவர் தலைவராக இருந்து நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியான ஒன்றுதான்.

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இதே நிலைதான் எங்களுக்கும் ஏற்படும் என்பதால், கூட்டணியை விட்டு விலக முடிவு செய்தோம். இப்போதும் எங்களின் முதல் வாய்ப்பாக என்டிஏ கூட்டணியே இருக்கிறது. எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால், கூட்டணியில் இணைவோம் என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் கருத்துக்கள் நயினார் நாகேந்திரன் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஒரு காலத்தில் டிடிவி தினகரன் சார், அமித்ஷா யார் முதலமைச்சர் என்று சொல்கிறார்களோ, அவர்களுக்காக பணியாற்ற தயார் என்று கூறினார்கள். இப்படியான சூழலில், இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ளது.
சில காலக்கட்டங்களில் சில அரசியல் மாற்றங்கள் வந்திருக்கலாம்.. சில மன வருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனை எங்களின் அகில இந்திய தலைமையுடன் பேசி தீர்த்திருக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை.. இன்னும் காலம் இருக்கிறது.. எங்களின் நோக்கமும், டிடிவி தினகரன் சாரினும் நோக்கனும் ஒன்று தான்.. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது. ஒருமித்த கருத்துக்களுடன் ஒன்றாக சேர்ந்தால், நமது லட்சியங்கள் நிறைவேறும். இதனை தவிர்த்து, சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால், நான் பொறுப்பாக முடியாது. நான் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகிறது. பாஜகவை பலப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு வருகிறேன். எனக்கு அதிமுக என்று வரும் போது அனைவரும் நண்பர்கள் தான்.
அதனால் என்டிஏவில் இருந்து யாரும் வெளியேறுவதற்கு நான் காரணம் கிடையாது. டிடிவி தினகரன் சார், ஓபிஎஸ் இருவரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்கள். இருவருமே எங்களுடன் கூட்டணியில் இருப்பார்கள் என்று தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன்.. டிடிவி தினகரன் சாரை சென்று பார்த்து பேச வேண்டும் என்றாலும் தயார்.. ஓபிஎஸை சென்று பார்க்க வேண்டுமென்றாலும் தயார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications