ஒரு கூட்டு கிளியாக.. என்டிஏ கூட்டணி தலைவர்கள் மேடையில் ஒன்றாக கை கோர்க்கும் போது ஒலித்த பாடல்
மதுரை: மதுரை மண்டேலா நகரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தின் முடிவில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அப்போது, "ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு.." என்ற சிவாஜி கணேசன் பட பாடல் மேடையில் ஒலித்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். நேற்று இரவு சென்னை வந்த மோடி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

மதுரை என்.டி.ஏ மாநாடு
இன்று காலை புதுவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி மதுரையிலும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்பட தமிழக பாஜக நிர்வாகிகள், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
சிவாஜி கணேசன் பட பாடல்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக கை கோர்த்து நின்றனர். அப்போது, "ஒரு கூட்டு கிளியாக.. ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு..! என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்" என்ற சிவாஜி கணேசனின் திரைப்பட பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடல் ஒலிபரப்பானதும் கூட்டத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

தொகுதி பங்கீடு ஆலோசனை?
பின்னர் இந்தக்கூட்டம் முடிந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அருகே டிடிவி தினகரன் அமர்ந்து இருந்தார். அன்புமணி , ஜிகே வாசன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
பியூஸ் கோயல் பேட்டி
இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமர் கலந்து கொள்ள மற்றொரு கூட்டம் குறித்து கூட்டணி தலைவர்களுடன் விவாதித்தோம். தொகுதி பங்கீடு தொடர்பாக குடும்பமாக பேசியிருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு குடும்பம்; நாங்கள் குடும்பமாக பேசியிருக்கிறோம். மற்றொரு சமயத்தில் அதுபற்றி சொல்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications